கிரிக்கெட்

இலங்கை - வங்கதேச கிரிக்கெட் அணியின் மோதலை ஒரே ரீல்ஸில் முடிவுக்கு கொண்டு வந்த சிஎஸ்கே

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரின் போது இலங்கை -வங்காளதேசம் அணிகள் மோதினகளத்திற்குள் வர மேத்யூஸ் 3 நிமிடங்களுக்கு மேல் நேரம் எடுத்து கொண்டதால், நடுவர்கள் அவருக்கு அவுட் கொடுத்தனர்

மாலை மலர்

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரின் போது இலங்கை -வங்காளதேசம் அணிகள் மோதின. அந்த போட்டியில் இலங்கை அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கினார். அப்போது அவரின் ஹெல்மட்டில் ஏதோ பிரச்சனை வந்தது. இதனால் நேராக க்ரீஸிற்குள் வராமல் மாற்று ஹெல்மட் கொண்டு வருவாறு அணியினருக்கு சிக்னல் கொடுத்தார். இதனால் ஷகிப் அல் ஹசன் அடுத்த பந்தை வீசுவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் வங்கதேச அணி வீரர்கள் நடுவர்களிடம் டைம் அவுட் முறையீடு செய்தனர்.

எம்சிசி விதியின் படி, ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்து வெளியேறினால், அடுத்த பேட்ஸ்மேன் 3 நிமிடங்களுக்குள் க்ரீஸில் இருக்க வேண்டும். ஆனால் மேத்யூஸ் 3 நிமிடங்களுக்கு மேல் நேரம் எடுத்து கொண்டதால், நடுவர்கள் அவருக்கு அவுட் கொடுத்தனர். இதனால் சோகமடைந்த மேத்யூஸ், உடனடியாக ஷகிப் அல் ஹசன் மற்றும் நடுவர்களிடம் முறையீடு செய்தார்.

 ஆனால் மேத்யூஸ் விளக்கங்களை ஏற்காத நடுவர்கள் உடனடியாக அவுட் கொடுத்தனர். இதன் மூலம் எந்த பந்தையும் எதிர்கொள்ளாமல் ஏஞ்சலோ மேத்யூஸ் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். உலகக்கோப்பை வரலாற்றிலேயே டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்த முதல் பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரனானார் மேத்யூஸ்.

இதற்கு ரிவெஞ்ச் கொடுக்கும் விதமாக உலககோப்பைக்கு பின்பு நடந்த வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி வீரர்கள் கைகடிகாரத்தை காட்டுவது போன்று புகைப்படம் எடுத்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போதிலிருந்தே இலங்கைக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான மோதல் கிரிக்கெட் களத்தில் மட்டுமில்லாது சமூக வலைத்தளங்களிலும் வெடிக்க ஆரம்பித்தது.

 இந்நிலையில் இந்த மோதலுக்கு முடிவுக்கட்டும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இலங்கை அணி வீரர் பத்திரனாவும் வங்கதேச அணி வீரர் முஸ்தாபிஜூர் ரஹ்மானும் இணைந்து பகத் பாசிலின் ஆவேசம் படத்தின் புகழ்பெற்ற காட்சியை ரீல்ஸ் செய்துள்ளனர்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.