அயர்லாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்றது. இதில் முதல் 2 போட்டிகள் முடிவில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகள் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரை சமன்செய்திருந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணி 39.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியதுடன் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. இப்போட்டியில் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த பென் கரண் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் பென் கரண் குடும்பத்தில் முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையை பென் கரண் படைத்துள்ளார். பென் கரணின் சகோதரர்களான டாம் கரண், சாம் கரண் ஆகியோர் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகின்றனர். இவர்கள் இருவரும் சர்வதேச போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.