கிரிக்கெட் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் முதன்மையாக இருப்பது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியாகும். இரு நாடுகளுக்கு இடையிலான தொடரில் விளையாடாமல் உள்ளதால் ஆசிய கோப்பை, உலகக் கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே விளையாடுகின்றனர். இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி எங்கு நடைபெற்றாலும், அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு டிக்கெட் விற்பனை தொடங்கிய உடன், அனைத்து டிக்கெட்டுகளும் மளமளவென விற்று தீர்ந்து விடும்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி வருகிற 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகியிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது வரை இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் அனைத்தும் முழுமையாக விற்பனையாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. டிக்கெட் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
VIP Suites East பகுதிக்கான டிக்கெட் (இரண்டு) விலை 257,815 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டிற்கு அளவில்லா உணவு மற்றும் டிரிங்ஸ், ஓய்வறை வசதி, தனி நுழைவாயில், பிரத்யேக கழிப்பறைகள் போன்ற வசதிகள் உண்டு.
அடுத்து Royal Box பகுதிக்கு இரண்டு டிக்கெட் விலை 2,30,700 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டள்ளது.
Sky Box East பகுதிக்கு இரண்டு டிக்கெட் விலை 167,851 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Platinum டிக்கெட் 75,659 ரூபாயாகவும், Grand Lounge டிக்கெட் 41,153 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. General East-க்கான டிக்கெட்தான் மிகவும் குறைந்த விலையாகும். இதன் விலை 10 ஆயிரம் ரூபாயாகும். இது விற்று தீரும் நிலையில் உள்ளது.
டிக்கெட் விலை மிகவும் அதிகமாக உள்ளதாக, தேவை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.