கிரிக்கெட்

முத்தரப்பு ஏ ஒருநாள் தொடர்: ஆப்கானிஸ்தான் வெற்றிபெற 320 ரன் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

முதலில் ஆடிய இந்தியா ஏ அணி 319 ரன்கள் குவித்தது.

இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு ஏ ஒருநாள் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒருநாள் போட்டி தம்புல்லாவில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக ஆடினார். அவர் 28 பந்துகளில் 38 ரன்னில் அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு சூர்யவன்ஷி-பிரியான்ஷ் ஆர்யா சிங் ஜோடி 75 ரன்கள் சேர்த்தது.

சிறப்பாக ஆடிய பிரியான்ஷ் ஆர்யா 42 பந்தில் 9 பவுண்டரி உள்பட 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ருதுராஜ் கெய்க்வாட் 30 ரன்னில் வெளியேறினார்.

4வது விக்கெட்டுக்கு திலக் வர்மா, குமார் கு‌ஷாக்ரா ஜோடி இணைந்தது. இருவரும் அரை சதம் கடந்தனர். இந்த ஜோடி 104 ரன்கள் சேர்த்த நிலையில் குஷாக்ரா 58 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து திலக் வர்மாவும் 59 ரன்னில் ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய விப்ரஜ் நிகாம் 30 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்தது.

ஆப்கானிஸ்தான் சார்பில் தாவூத்சாய், அப்துல்லா அகமதுசாய், பர்மனுல்லா சபி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.