விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி

இந்திய மகளிர் அணி, டொமினிகன் குடியரசு அணிக்கு எதிராக 4-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்து.

செஸ் விளையாட்டில் மிகப்பெரிய போட்டியான செஸ் ஒலிம்பியாட் 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி 46-ஆவது செஸ் ஒலிம்பியாட் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் இன்று தொடங்கி 27-ந்தேதி வரை நடக்கிறது.

இதில் சாதனை எண்ணிக்கையாக ஓபன் பிரிவில் 208 அணிகளும், பெண்கள் பிரிவில் 192 அணிகளும் கலந்து கொள்கின்றன. அதாவது ஏறக்குறைய 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் களம் காண்கிறார்கள்.

வெற்றியுடன் தொடங்கிய இந்தியா:

உலக சாம்பியன் டி. குகேஷ், நிஹால் சரின் மற்றும் விதித் குஜ்ராத்தி ஆகியோர் உறுதியான வெற்றிகளைப் பதிவுசெய்தபோதிலும், அர்ஜுன் எரிகைசியின் கடைசி நேர சரிவு, இந்தியா முழு வெற்றி பெறும் வாய்ப்பை இழக்க செய்தது. இதன்மூலம், 46-ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஆண்கள் அணி, தாய்லாந்தை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி தனது பயணத்தைத் தொடங்கியது.

தனடோன் குல்ப்ருதானோனை வீழ்த்தி, நிஹால் வெற்றி பெற்ற முதல் இந்திய வீரர் ஆனார். அதனைத் தொடர்ந்து, குகேஷ் தனது சிறப்பான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி ஃபாரிஸ் ரஷீத் அல்ரியாமியை வீழ்த்தினார்.

பின்னர், விதித், துப்ஃபா கும்நோர்கேவை எளிதாக வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தார். இருப்பினும், ஆட்டத்தின் பெரும்பகுதி நேரம் வலுவான நிலையில் இருந்த அர்ஜுன், பிரின் லோஹாவிரபாப்பிடம் தோல்வியடைந்தார்.

இந்திய மகளிர் அணி அபாரம்:

இதற்கிடையில், இந்திய மகளிர் அணி, டொமினிகன் குடியரசு அணிக்கு எதிராக 4-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று தனது பயணத்தை தொடங்கியது.

தரவரிசையில் முன்னணியில் உள்ள இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி, வெள்ளை காய்களுடன் பிரான்செஸ்கா ரமிரெஸ் லூசோனை வீழ்த்தி வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கினார். அதே சமயம், ஆர். வைஷாலி, மிகுலினா டி லா ரோசா மார்டினெஸுக்கு எதிராக எளிதாக வெற்றி பெற்றார்.

மேரி லோலி கொன்சாலஸ் பெகுவேரோவுக்கு எதிரான தனது வெற்றிக்காக வந்திகா அகர்வால் கடுமையாக போராட வேண்டியிருந்தது. இந்திய வீராங்கனை ஆட்டத்தை சமன் செய்யும் நிலையை நோக்கி செல்வது போல் தோன்றியபோது, ​​அவரது எதிராளி செய்த ஒரு தவறால், கோட்டை மற்றும் சிறு காய்களைக் கொண்ட இறுதி ஆட்டம் ஏற்பட்டது. அதில் வந்திகாவின் முன்னேறிய சிப்பாய் தீர்க்கமானதாக அமைந்தது.

SCROLL FOR NEXT