விளையாட்டு

சர்வதேச குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை சந்திரிகாவுக்கு தங்கப்பதக்கம்

Gajendra Perumal

உலக குத்துச்சண்டையில் இளையோருக்கான பியூச்சர்ஸ் கோப்பை போட்டியில் இந்திய வீராங்கனை சந்திரிகா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

பாங்காக்:

உலக குத்துச்சண்டையில் இளையோருக்கான பியூச்சர்ஸ் கோப்பை போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்தது. கடைசி நாளான நேற்று 51 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனையான மராட்டியத்தை சேர்ந்த சந்திரிகா பூஜாரி, உஸ்பெகிஸ்தானின் மர்டோனோவா நஜோகட்டுடன் மோதினார்.

சரமாரியாக குத்துகளை விட்டு எதிராளியை திணறடித்த சந்திரிகா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அதே சமயம் குஞ்சன் (48 கிலோ), ஜாய்ஸ்ரீதேவி (54 கிலோ), அம்பேத்கர் மீட்டே (50 கிலோ). ஆகிய இந்தியர்கள் தங்களது இறுதி ஆட்டங்களில் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தனர்.

முன்னதாக அரைஇறுதியில் தோல்வியை தழுவிய இந்தியாவின் ராதாமணி லாங்ஜம் (57 கிலோ) வெண்கலப்பதக்கம் பெற்றார். இந்த போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கம் வென்றுள்ளது.