லாகூர்:
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நடந்த ஈட்டியெறிதல் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
அவரை தொடர்ந்து, இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றிலேயே தனிநபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தைப் பெறும் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அர்ஷத் நதீம் பெற்றார். இந்த ஒரு தங்கப்பதக்கத்துடன் ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 62-ம் இடத்தை பாகிஸ்தான் பிடித்தது.
தங்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்குவதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் அறிவித்தார். நதீமின் சொந்த ஊரான கானேவாலில் அவரது பெயரில் விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
இதற்கிடையே, பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு அவரது மாமனார் முகமது நவாஸ் எருமை மாட்டை பரிசாக அளித்துள்ளார். அவர்களின் ஊரில் எருமை மாடு என்பது மதிப்பு மற்றும் கௌரவமிக்க ஒன்றாக கருதப்படுகிறது.
நவாசின் மகளான ஆயீஷாவை தான் நதீம் திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், எருமை மாட்டிற்கு பதிலாக 5 அல்லது 6 ஏக்கர் நிலத்தையே பரிசாக கொடுக்கலாம். சரி, எருமை மாடும் பரவாயில்லை தான். கடவுள் அருளால் அவர் சற்று வசதி படைத்தவர். அதனால் எனக்கு எருமை மாட்டை பரிசாக அளித்துள்ளார். அது மதிக்கத் தக்கது என தெரிவித்தார்.