வழிபாடு

அமாவாசை விரதம் யார் இருக்கலாம்?

தாய், தந்தை இல்லாத ஆண்கள் அமாவாசை விரதம் இருக்க வேண்டும்.உணவு தானம் செய்யுங்கள் அல்லது பசுவிற்கு அகத்திக் கீரை கொடுங்கள்.

அமாவாசை நாளில் எல்லோரும் விரதம் இருக்க தேவையில்லை. தாய், தந்தை இல்லாத ஆண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். கணவர் இல்லாத பெண்கள் இந்த விரதம் இருக்கலாம். திருமணமான ஒரு பெண்ணுக்கு தாய் அல்லது தந்தை இல்லை என்றாலோ, அல்லது இருவரும் இல்லை என்றாலும் அவர் விரதம் இருக்கக் கூடாது.

காரணம் அவருக்கு கணவர் இருக்கும் நிலையில் அவர் அமாவாசை விரதம் இருக்கக் கூடாது. ஒரு ஆணுக்கு தாய் இல்லாவிட்டாலோ, தந்தை இல்லாவிட்டாலோ, அல்லது இருவரும் இல்லை என்றாலோ அவர் அமாவாசை விரதத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

தர்ப்பணம் கொடுக்க வேண்டும். உபவாசம் இருக்க வேண்டும். கண்டிப்பாக எள்ளும், தண்ணீரும் இரைத்து முன்னோர்களை வழிபட வேண்டும். கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். யாருக்காவது உணவு தானம் செய்யுங்கள் அல்லது பசுவிற்கு அகத்திக் கீரை கொடுங்கள்.

பெண்ணிற்கு சகோதரர்கள் இருப்பின் அவர்கள் பெற்றோருக்கு தர்ப்பணம், விரதம் இருப்பார்கள். சகோதரர் இல்லை, பெற்றோர் இருவரும் இல்லை என்றால் பெண்கள் கோயிலுக்கு சென்று தானம் கொடுக்கலாம், வீட்டிற்கு வந்து நான்கு பேருக்கு அன்னதானம் தரலாமே தவிர அமாவாசை விரதத்தை கணவர் இருக்கும் பெண்கள் கடைபிடிக்கக் கூடாது. அமாவாசை தினத்தில் முன்னோர்களையும் தாய், தந்தையர்களை யார் வழிபடுகிறார்களோ, அவர்களின் பிள்ளைகளுக்கும் தலைமுறைக்கும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

SCROLL FOR NEXT