வழிபாடு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா

விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர்பவனி வருகிற 7-ந்தேதி நடக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.

‘கீழ்​திசை நாடுகளின் லூர்து நகரம்’

‘கீழ்​திசை நாடுகளின் லூர்து நகரம்’ என அழைக்கப்படும் இங்கு ஆண்டுதோறும் பெருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பெருவிழா இன்று (சனிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

முன்னதாக மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறை​மாவட்ட ஆயர் சகாய​ராஜ் கொடியை புனிதம் செய்து வைத்த பின், கொடி ஊர்​வலம் புறப்படும். பின்னர், கொடிக்கம்பத்தில் தஞ்சை மறை​மாவட்ட ஆயர் சகாய​ராஜ் கொடி ஏற்றுகிறார். தொடர்ந்து, திருத்தல கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்​கருணை ஆசி, தமிழில் திருப்பலி நிறைவேற்றுதல் ஆகியவை நடைபெறுகிறது.

சிலுவைப்பாதை

தொடர்ந்து, நாளை (30-ந்தேதி) முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி வரை பேராலயம், விண்​மீன் ஆலயம், மாதாகுளம், மேல்​கோயில், கீழ்​கோயில் ஆகிய இடங்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கனி, கன்னடம், தெலுங்கு, இந்தி, கிழக்கத்திய மராத்தி ஆகிய மொழிகளில் இரவு, பகலாக சிறப்பு திருப்பலிகள் நடைபெறுகிறது. இதனிடையே வருகிற 1-ந்தேதி சிலுவைப்பாதை ஊர்வலம் நடக்கிறது.

பெரிய தேர்பவனி

விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர்பவனி வருகிற 7-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்பவனியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து, 8-ந்தேதி விண்​மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்தநாளை முன்னிட்டு, அன்று காலை தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாய​ராஜ் தலைமையில் சிறப்பு கூட்டுப்​பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, கொடி இறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவடைகிறது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

ஆண்டு பெருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதேப்போல், சிறு, சிறு குழுக்களாக பிரிந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த படி உள்ளனர். இவ்வாறு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் வசதிக்காக நாகை மற்றும் வேளாங்கண்ணி பகுதிகளில் ஆங்காங்கே அன்னதானம், குடிநீர், தேநீர், குளிர்பானங்கள் ஆகியவற்றை பொதுமக்கள், தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர்.