வழிபாடு

கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவம் நிறைவு: பக்தர்கள் சாமி தரிசனம்

வசந்த உற்சவ திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கியது.ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாலை மலர்

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் திருவிழா நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று 10-ம் நாள் நிறைவு விழா நடந்தது. இதில் மேளதாளம் முழங்க தீவட்டி, வர்ணக்குடை, பரிவாரங்களுடன், சுந்தரவல்லி யானை முன்னே செல்ல, சகல பரிவாரங்களுடன் பல்லக்கில் புறப்பாடாகி, கள்ளழகர் பெருமாள், ஸ்ரீதேவி பூமிதேவியருடன் அங்குள்ள ஆடி வீதிகள், பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில், அக்ரஹாரம், வழியாக சென்று வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.

அந்த மண்டபம் முழுவதும் வண்ண, வண்ண, பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி அதே பரிவாரங்களுடன் வந்த பாதை வழியாகவே சென்று கோவிலுக்குள் போய் இருப்பிடம் சேர்ந்தார்.

விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், செய்திருந்தனர்.