கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வருஷாபிஷேக விழா 
வழிபாடு

கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வருஷாபிஷேக விழா

கன்னியாகுமரி வெங்கடாசலபதி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவிக்கு திருமஞ்சனம் சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், யாகசாலை பூஜை, ஹோமம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடத்தப்பட்டது.

மாலை மலர்

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்திலுள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 3-வது ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலையில் புண்ணியாகவாசனம், அஷ்டோத்திர பூஜை, 108 கலசங்களில் புனித நீர் நிரப்பி கலச பூஜை போன்றவை நடந்தது. தொடர்ந்து வெங்கடாசலபதி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவிக்கு திருமஞ்சனம் சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், யாகசாலை பூஜை, ஹோமம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடத்தப்பட்டது.

இந்த பூஜைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அர்ச்சகர்கள் வி.கே.சாய் கிருஷ்ணா, முரளி ஆகியோர் தலைமையில் கன்னியாகுமரி வெங்கடேஸ்வரசாமி கோவில் அர்ச்சகர்கள் நடத்தினார்கள். நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய துணை தலைவர் அனில் குமார் ரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர் மோகன் ராவ், கார்த்திகேயன், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா துணைத்தலைவர் ஹனுமந்த ராவ், பொதுச்செயலாளர் பானுதாஸ், குமரி மாவட்ட வள்ளலார் பேரவைத் தலைவர் பத்மேந்திரா சுவாமி, கன்னியாகுமரி வெங்கடேஸ்வர சாமி கோவில் ஆய்வாளர் சாய் கிருஷ்ணா மற்றும் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்பட பக்தர்கள் பலர் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.