கன்னியாகுமரியை அடுத்த பெருமாள்புரம் ஈழத்தமிழர் குடியிருப்பு வன பேச்சியம்மன் கோவில் ஆனி கொடை விழா நேற்றுமுன்தினம் தொடங்கியது. விழாவின் முதல் நாளில் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், பிற்பகல் 2 மணிக்கு தீர்த்தவாரி போன்றவை நடந்தது. தொடர்ந்து கொம்பு, தப்பட்டையுடன் அம்மனுக்கு பறவை காவடி மற்றும் பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள பரசுராம விநாயகர் கோவில் முன்பிருந்து தொடங்கியது. ஊர்வலத்தை கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் தொடங்கி வைத்தார். ஊர்வலம் விவேகானந்தபுரம், சுவாமிநாதபுரம், பழத்தோட்டம், மகாதானபுரம் ரவுண்டானா வழியாக கோவிலை வந்து அடைந்தது.
விழாவில் நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பகல் 12 மணி மற்றும் 1 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. 3-வது நாளான இன்று (சனிக்கிழமை) சுடலைமாட சாமிக்கு உச்சிகால பூஜை, அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் மஞ்சள் நீராடுதல் நடைபெறும். பின்னர் அமுத படைத்தல், சமபந்தி விருந்துடன் விழா நிறைவடைகிறது.