திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள போடுவார்பட்டியில் சுமார் 100 ஆண்டுகளாக கிணற்றில் பாதுகாக்கப்பட்டு வந்த ஆதி ஸ்ரீ உச்சினிமாகாளியம்மன் சிலையை பக்தர்கள் வெளியே எடுத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
பழனி அருகே உள்ள போடுவார்பட்டியில் ஆதி ஸ்ரீ உச்சினிமாகாளியம்மன் மிகவும் ஆக்ரோஷமான தெய்வமாக உள்ளது என்று அப்பகுதி மக்கள் நம்பினர். சிறு தவறு செய்தால் கூட அம்மன் அதனை தண்டித்து வந்ததால் அந்த சுவாமிக்கு தினந்தோறும் வழிபாடுகள் நடத்தப்பட்டது.
பின்னர் முன்னோர்கள் வழிகாட்டுதலின்படி அம்மனை சாந்தப்படுத்தும் நோக்கில் கிணற்றில் போட முடிவு செய்தனர். அதன்படி சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முன்னோர்கள் அம்மன் சிலையை கிணற்றில் இறக்கி பாதுகாப்பாக மூடி வைத்தனர்.
பின்னர் அந்த கிணற்றுக்கு முக்கிய நாட்களில் பூஜை செய்து வழிபட்டனர். சுவாமி கிணறு என்றே அழைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பாரம்பரிய வழக்கத்தின்படி இந்த வாரம் கிணற்றில் இருந்து சிலை வெளியே எடுக்க முடிவு செய்தனர். அதன்படி அம்மன் சிலை 100 ஆண்டுகளுக்கு பின்பு வெளியே எடுக்கப்பட்டது. ஆக்ரோச முகத்துடன் அதே நிலையில் இருந்த அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்து வழிபட்டனர். இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.
பூஜைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வழக்கம்போல் ஆதி ஸ்ரீ உச்சினிமாகாளியம்மன் சிலை மீண்டும் கிணற்றில் இறக்கி பாதுகாப்பாக மூடப்பட்டது. இந்த அரிய பாரம்பரிய வழிபாட்டு முறை அப்பகுதி மக்களிடையே இன்றளவும் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.