திருவண்ணாமலை மலையில் உள்ள பாதத்திற்கு பூஜை செய்யப்பட்டுள்ள காட்சி. 
வழிபாடு

தீபத்திருவிழா முடிந்த நிலையில் மகாதீபம் ஏற்றப்பட்ட மலையில் பிராயசித்த பூஜை

திருவண்ணாமலை மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாலை மலர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. அன்று காலையில் கோவிலில் பரணிதீபமும், மாலையில் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபம் மலை உச்சியில் காட்சி அளித்தது. அப்போது பக்தர்கள் பலர் மலைக்கு சென்று தீப தரிசனம் செய்து வந்தனர்.

திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த மலையில் பக்தர்கள் மிதித்து ஏறுவதால் பிராயசித்த பூஜை நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீப திருவிழா முடிந்த நிலையில் நேற்று பிராயசித்த பூஜை நடந்தது.

இதனையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடத்தி சாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புனிதநீர் கலசத்தை மலைக்கு கொண்டு சென்று அங்கு பிராயசித்த பூஜை நடந்தது. பின்னர் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.