திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை தங்கத் தேரோட்டம் நடந்தது. திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி பங்கேற்று தங்கத் தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து தங்கத்தேரை இழுத்தனர்.
உற்சவர் பத்மாவதி தாயார் தங்கம், வைர ஆபரணங்கள், பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்கத்தேரில் எழுந்தருளி திரளான பக்தர்கள் வெள்ளத்தில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேங்காய் உடைத்தும், நெய் தீபம் மற்றும் கற்பூர ஆரத்தி காண்பித்தும் பத்மாவதி தாயாரை தரிசித்தனர்.
தேரோட்டத்தில் கோவில் துணை அதிகாரி கோவிந்தராஜன் மற்றும் பிற கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.