வழிபாடு

திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

கோவில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது. பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மாலை மலர்

திருச்செந்தூர்:

அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழா காலங்களை தவிர்த்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. மார்கழி மாதத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.

 அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசை யில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ரூ.100 கட்டணம் தரிசனத்திலும், பொது தரிசனத்திலும் பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் இன்று கோவில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.