திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுர நுழைவு வாயில் மூடப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம். 
வழிபாடு

அருணாசலேஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் சாமி தரிசனம் செய்ய தடை

கொரோனா பரவலை தடுக்க நேற்று முதல் நாளை வரை அருணாசலேஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. தற்போது தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்தி வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது.

கடந்த வாரம் தொடர்ந்து விழா நாட்கள் வந்ததால் 14-ந்தேதியில் இருந்து 18-ந் தேதி வரை வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. 5 நாட்களுக்கு பிறகு அருணாசலேஸ்வரர் கோவிலில் 19-ந் தேதியும், நேற்று முன்தினமும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அரசு உத்தரவின் படி நேற்று முதல் மீண்டும் தொடர்ந்து 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக அருணாசலேஸ்வரர் கோவிலின் ராஜகோபுரம் உள்ளிட்ட 4 கோபுர வாசல்களும் மூடப்பட்டு அதன் முன்பு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. கோவிலுக்குள் அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் ராஜகோபுரத்தின் முன்பு தேங்காய் உடைத்து விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அதேபோல் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களும் மூடப்பட்டன. இதனால் கிரிவலம் சென்ற பக்தர்கள் அஷ்ட லிங்கத்தை வழிபாடு செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் கோவில்களில் சாமிக்கு அனைத்துப் பூஜைகளும் நடந்தது.