திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பெரும் திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். அதன்படி கடந்த 21 ஆம் தேதி காலை 8 மணிக்கு மேல் கொடி ஏற்றம் நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் மாலையும் சிறப்பு வாகனத்தில் எழுந்தருளி சவுந்தரராஜ பெருமாள் தேரோடும் வீதிகள் வழியாக உலா வந்தார்.
கடந்த 27 ந் தேதி மாலை சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதையொட்டி மாப்பிள்ளை அழைப்பு, காசி யாத்திரை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பின்னர் திருக்கல்யாணம் நடைபெற்றது. அன்று இரவு திரு தம்பதியர் கோலத்தில் சவுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதமாக பூப்பல்லக்கில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தினை நிலக்கோட்டை எம்.எல்.ஏ. அய்யனார், தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவி கவிதா சின்னத்தம்பி, அகரம் பேரூராட்சி தலைவர் மணி என்ற நந்தகோபால், துணைத் தலைவர் ஜெயபால், தொழிலதிபர் கந்தசாமி கவுண்டர் உள்ளிட்டோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து சவுந்தரராஜ பெருமாள், சவுந்தரவல்லி தாயார், ஆண்டாள், சமேதமாக திருத்தேரில் எழுந்தருளி தேரோடும் வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் இந்து சமய அறநிலைய துறை மண்டல இணை ஆணையர் சபர்மதி, தக்கார் அன்னக்கொடி, தாடிக்கொம்பு பேரூராட்சி செயல்அலுவலர் பானு ஜெயராணி, திண்டுக்கல் த.வெ.க. மத்திய மாவட்டசெயலாளர் தேவா என்ற தேவராஜ்,
ரெட்டியார்சத்திரம் த.வெ.க. ஒன்றிய செயலாளர் சிவன் கருப்பன், தாடிக்கொம்பு பேரூர் செயலாளர் அம்பேத் ராஜா, அகரம் பேரூர் செயலாளர் சங்கீத்குமார், அகரம் பேரூர் இளைஞரணி செயலாளர் அசோக்குமார், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் யுவராஜ், பட்டாச்சாரியார்கள் ராமமூர்த்தி, ரமேஷ், ஜெகநாதன், அரவிந்தசாமி மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர். இன்று தீர்த்தவாரி மற்றும் நாளை வெள்ளிக்கிழமை மாலை தெப்ப உற்சவ விழா நடைபெறும்.