ஷீரடி சாய்பாபா கோவில் 
வழிபாடு

ஷீரடி சாய்பாபா கோவிலில் அதிகாலை, இரவு நேர பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி

ஷீரடி சாய்பாபா கோவில் நிர்வாகம் இரவு 10.30 மணிக்கு நடைபெறும் ‘செஜார்த்தி ஆர்த்தி' பூஜையை இரவு 10 மணிக்கும், அதிகாலை ‘காகட் ஆர்த்தி' பூஜையை 4.30 மணியில் இருந்து 5.15 மணிக்கும் மாற்றி உள்ளது.

மாலை மலர்

மும்பை :

மராட்டியத்தில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோவிலில் அதிகாலை மற்றும் இரவு பூஜைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்தநிலையில் தற்போது மாநிலத்தில் தொற்று பாதிப்பு குறைந்து உள்ளது.

எனவே ஷீரடி சாய்பாபா கோவில் நிர்வாகம் பக்தர்கள் அதிகாலை, இரவு பூஜையில் கலந்து கொள்ளலாம் என அறிவித்து உள்ளது.

இது குறித்து கோவில் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி பாக்யஸ்ரீ பானாயத் கூறுகையில், "இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை விதிக்கப்பட்டு இருந்த இரவு நேர ஊரடங்கு காரணமாக அந்த நேரத்தில் நடந்த பூஜைகளில் பக்தர்கள் கலந்துகொள்ள முடியவில்லை. தற்போது இரவு, அதிகாலை பூஜைகளில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு பக்தர்கள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்" என்றார்.

இதேபோல கோவில் நிர்வாகம் இரவு 10.30 மணிக்கு நடைபெறும் ‘செஜார்த்தி ஆர்த்தி' பூஜையை இரவு 10 மணிக்கும், அதிகாலை ‘காகட் ஆர்த்தி' பூஜையை 4.30 மணியில் இருந்து 5.15 மணிக்கும் மாற்றி உள்ளது.