வழிபாடு

முன்ஜென்ம வினைகளை போக்கும் மாவிளக்கு வழிபாடு

முன்ஜென்ம வினைகளும், நாம் செய்த தவறுகளால் உண்டான தோஷங்களும், பாவங்களும் விலகும்.

வழிபாடு

சங்கரன்கோவில் கோமதி அம்பாளுக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத் தடை, புத்திர தோஷம், நாக தோஷம் முதலியவை அகலும் என்று கூறப்படுகிறது. அம்பாள் சன்னிதி முன்புள்ள ஸ்ரீ சக்கரம் “ஆக்ஞா சக்கரம்“ என்று அழைக்கப்படுகிறது. அதில் உட்கார்ந்து அம்மனை வேண்டி தியானித்தால் சகலமும் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம். கூடவே நிலையான மன அமைதியும் பெறலாம். இங்குள்ள கால பைரவரை அஷ்டமி நாட்களில் சந்தனக் காப்பிட்டு வழிபாடு செய்தால், முன்ஜென்ம வினைகளும், நாம் செய்த தவறுகளால் உண்டான தோஷங்களும், பாவங்களும் விலகும்.

தமிழகத்தில் எங்கும் இல்லாத சிறப்பு

இறைவனின் 24 மகேஸ்வர மூர்த்திகளில் ஒன்றாக சங்கரநாராயண கோலம் பூண்டு காட்சி அளிப்பது தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் அமையாத. இங்கு அமைந்திருப்பது இதன் சிறப்பாகும். உக்கிரமபாண்டிய மன்னரால் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவில் இறைவன் பூமியில் இருந்து தானே வெளிப்பட்ட சுயம்புலிங்க மூர்த்தியாவார். இச்சுவாமிக்கு 8 திருநாமங்கள் இருப்பதாக தல புராணம் கூறுகின்றது. வாவிசைநாதன், வைத்திய நாதன், சீராசைநாதன், வானோர்பரவும் புன்னை வனநாதன், சங்கரலிங்கம், கூழையாண்டி, சங்கர நாராயணன், சங்கரமூர்த்தி. இவ்வளவு மங்கள மயமான கடவுள் மீது சங்கரசதாசிவ மாலை, சங்கரலிங்க உலா, இறைவி மீது கோமதி சுதரத்னமாலை ஆகிய தமிழ்மாலைகள் கவிஞர்களும் புலவர்களும் பாடித்துதித்து போற்றி உள்ளனர். நாக அரசர்கள் உண்டாக்கிய நாகசுனை தீர்த்தத்தால் விதிப்படி நீராடி அம்மை அப்பரை தரிசித்தால் சர்ப்ப தோஷம் விலகும்.

சோடச தீபாராதனை

ஆடித்தபசு திருவிழாவின் 12-ம் திருநாளில் பகல் 12 மணிக்கு சங்கரலிங்க சுவாமி மற்றும் கோமதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதைத்தொடர்ந்து வரும் 3 நாட்கள் தினமும் இரவு 7 மணிக்கு கோமதி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கும். 3 நாட்களும் சோடச தீபாராதனை நடைபெறும். ஊஞ்சல் உற்சவத்தின் 3-வது நாளில் கோமதி அம்மனுக்கு எண்ணை காப்பு சாத்தி சோடச தீபாராதனை நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோமதி அம்மனை வழிபடுவர்.