வழிபாடு

திருப்பனந்தாள் அருகே, மானம்பாடி புனித லூர்து அன்னை ஆலயத்தில் தேர் பவனி

தேர் பவனி வாணவேடிக்கையுடன் நடந்தது. தேர் பவனியின் போது, பக்தர்கள் உப்பு, மிளகு தூவி வேண்டுதலை நிறைவேற்றினர்.

மாலை மலர்

திருப்பனந்தாள் அருகே மானம்பாடி மெயின் ரோட்டில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் ஆண்டு தோறும், தேர் பவனி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். தொடர்ந்து 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு விழா வழக்கம்போல் விழா கொண்டாட திட்டமிடப்பட்டு, கடந்த 9-ந் தேதி மறைமாவட்ட உதவி பங்குத்தந்தை சூசைமாணிக்கம் தலைமையில் திருக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அருட்தந்தையர்களால் செபமாலை, நவநாள் செபம், கூட்டு திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜெபமாலை நவநாள் திருப்பலி மற்றும் மறையுரையை பங்கு தந்தைகள் நடத்தினார்கள். விழாவில் நேற்று முன்தினம் வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித லூர்து அன்னை எழுந்தருளி தேர் பவனி வாணவேடிக்கையுடன் நடந்தது.

தேர் பவனியின் போது, பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட தேரின் மீது தூவி மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

இதற்கான ஏற்பாடுகளை நாட்டாண்மை ஆரோக்கியசாமி யாக்கோப், தலைவர் இஸ்ரேல் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.