வழிபாடு

அனுமன் வாகனத்தில் கோதண்டராமர் உலா

வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. சுவாமி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருமலை:

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியளவில் அனுமன் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கோண்டராமர் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வாகன வீதிஉலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், காளைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன. பஜனைக்குழுவினர் பக்தி பஜனை பாடல்களை பாடினர். பெண்கள், சிறுமிகள் கோலாட்டம் ஆடினர்.

அதைத்தொடர்ந்து காலை 10.30 மணியளவில் உற்சவர்களான சீதா, லட்சுமணருடன், கோதண்டராமருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 7 மணியில் இருந்து 8.30 மணி வரை யானை வாகனத்தில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவில் அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT