சித்தூர்:
காணிப்பாக்கம் கோவில் பிரம்மோற்சவ விழாவில் நேற்று கல்ப விருட்ச வாகனத்தில் விநாயகர் வீதிஉலா வந்து அருள் பாலித்தார்.
சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கத்தில் உள்ள சுயம்பு வரசித்தி விநாயகர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 18-வது நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது.
அதைத்தொடர்ந்து மாலை கல்ப விருட்ச வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வாகன வீதிஉலாவின்போது மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாடவீதிகளில் திரண்டிருந்த திரளான பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவ விழாவின் 19-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடக்கிறது. அதன்பிறகு பூலங்கி சேவை வாகனத்தில் உற்சவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.