திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தபோது எடுத்த படம். 
வழிபாடு

திருநள்ளாறு சனீஸ்வரர், கைலாசநாதர் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா

திருநள்ளாறு கோவிலில் 16 வகையான பொருட்களால் சுவாமிக்கு அபிஷேகமும், அலங்காரம், தீபாராதனையும் நடந்தது. இதைத்தொடர்ந்து சிவகாமி அம்பாள், நடராஜர் ஊடல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆருத்ரா உற்சவ நிகழ்ச்சி கடந்த 11-ந்தேதி தொடங்கியது. நிறைவு நாளான நேற்று காலை சிவகாமி அம்பாள், நடராஜர் பிரம்ம தீர்த்த கரைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தது.

இதையொட்டி 16 வகையான பொருட்களால் சுவாமிக்கு அபிஷேகமும், அலங்காரம், தீபாராதனையும் நடந்தது. இதைத்தொடர்ந்து சிவகாமி அம்பாள், நடராஜர் ஊடல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை காட்டப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் வாரிய தலைவர் கேசவன், துணை தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT