வழிபாடு

அட்சய திருதியை அன்று செல்ல வேண்டிய கோவில்கள்

சிவனை வழிபட்டால், செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு அருகில் உள்ள விளங்குளம் என்ற ஊரில் அமைந்துள்ளது அட்சயபுரீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய முக்கிய ஆலயம். சனி பகவான் பள்ளத்தில் விழுந்த போது அவர் விழுந்த இடத்தில் பல கோடி யுகங்களாக மறைந்திருந்த ‘பூச ஞான வாவி’ என்ற ஞான தீர்த்தம் சுரந்து சனிபகவானை மேலே எழுப்பி கரை சேர்த்தது.

இதனால் சனி பகவானின் கால் ஊனம் நிவர்த்தியானது. அட்சய திருதியை நாளில் சனி பகவானின் ஊனத்தைத் தீர்த்த இறைவனுக்கு நாள் முழுவதும் பலவித வடிவங்களில் வழிபடப்பட்டு வருகிறது.

அன்றைய தினம் இறைவனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இந்த ஆலய இறைவியான அபிவிருத்தி நாயகியை வழிபட, பக்தர்கள் நினைப்பதை அபிவிருத்தி செய்தருளக்கூடிய கருணை மிகு நாயகியாக விளங்குகிறார்.

சனி பகவான் உடன் இருந்து வழிபடும் நாளான அட்சய திரிதியை நாளில் நாமும் அட்சய புரீஸ்வரரையும் அபிவிருத்தி நாயகியையும் வணங்க செல்வம் பெருகும். வாழ்க்கையில் வளம் கொழிக்கும் என்பது நிச்சயம்.

* தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி அருகே உள்ள திருக்கோளூரில் அமைந்துள்ளது வைத்தமாநிதிப் பெருமாள் ஆலயம். இந்த பெருமாள், குபேரனுக்கு மரக்கால் மூலம் செல்வம் அளந்ததாக ஐதீகம். இங்கு பெருமாள் அந்த மரக்காலை தலையணையாக வைத்து உறங்குவது அற்புதமான காட்சி. அட்சய திருதியை அன்று இங்கு தரிசனம் செய்தால் வாழ்க்கையில் செல்வ வளம் பெருகும்.

* கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் உள்ள முழையூர் பரசுராமர் ஆலயம் அட்சய திருதியை அன்று மிக முக்கியமான தலம். இந்த நாளில், சிவபெருமானுக்கு காசு மாலை அணிவிக்கப்படுகிறது.

குபேர பூஜை நடைபெறுகிறது. அந்நாளில் சிவனை வழிபட்டால், செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

* திருவாரூர் மாவட்டம் கீவளூரில் உள்ள அட்சய லிங்கேஸ்வரரை தரிசித்தால் குபேரனை போல வாழும் யோகம் அமையும்.

செல்வ வளத்தை வழங்கும் குபேரனுக்கு தனி சன்னதி இருப்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் எல்லா வளமும் பெற இந்த சன்னதியில் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.