ஆடி மாதத்தில் தேடி வரும் திருவிழாக்களை நாம் கொண்டாடி மகிழ்ந்தால், கோடிப் புண்ணியமும், கோலாகல வாழ்க்கையும் கிடைக்கும். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. குறிப்பாக இந்த மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருவார்கள்.
ஆடி மாதத்தில் அம்பிகைக்கு விருப்பமான முக்கியமான மங்கள பொருட்களை அம்மனுக்கு படைத்து வழிபட்டால் அம்மன் அருள் அனைத்து விதமான வழிகளிலும் வந்து சேரும்.
தெய்வ வழிபாட்டில் தீபம் இல்லாமல் பூஜையானது முழுமை பெறாது. வழிபாட்டில் தீபத்திற்கு முக்கிய இடம் உண்டு. பார்வதி தேவிக்கு மண் அகலில் 16 பஞ்சு திரியிட்டு, நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். எப்போதும் விளக்கேற்றி வைத்து, அம்பிகைக்கு உரிய மந்திரங்களை சொல்லி வழிபட வேண்டும். இதனால் அன்னையின் அருளை பரிபூரணமாக பெற முடியும்.
அம்மனுக்கு 16 வகையான குங்குமங்களை படைத்து வழிபடுவது சிறப்பானது. ஆடி மாதத்தில் செவ்வாய்கிழமை தோறும் பக்தர்கள் மங்களகவுரி விரதம் இருந்து வழிபடுவார்கள். திருமணமான பெண்கள் குங்குமம் படைத்து, தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக வேண்டிக் கொள்வார்கள். திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு சிவ பெருமானை போல் எப்போதும் விலகாத கணவர் கிடைக்க வேண்டும் என குங்குமங்கள் சமர்ப்பித்து வேண்டிக் கொள்வார்கள். சிவப்பு, ஆரஞ்சு, பச்சை உள்ளிட்ட பல வண்ணங்களில் ஆன குங்குமங்களை படைத்து வழிபடுவது சிறப்பானது.
பார்வதி தேவியின் மனதை குளிர வைத்து, அவரின் அன்பிற்கு உரியவர் ஆக வேண்டும் என்றால் ஆடி மாதத்தில் மல்லிகைப்பூ படைத்து வழிபட வேண்டும். ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும் மல்லிகைப்பூ சாத்தி வழிபடுவது மிக சிறந்த பலனை தரும்.
ஆடி மாதத்தில் அம்மனுக்கு புடவை சாத்தி வழிபடுவது பல மடங்கு உயர்ந்த புண்ணிய பலனை தரும். அம்மனுக்கு ஆடை சாத்தி வழிபடுபவர்களுக்கு உறவுகள், குடும்பத்திற்குள் உருவாகும் எந்த பிரச்சினையும் ஏற்படாது. அதிலும் சிவப்பு, மஞ்சள், பச்சை நிற புடவையை அம்மனுக்கு சாத்தி வழிபடுவதால் அம்மனின் அருளை பெற முடியும்.
ஆடி மாதத்தின் ஒவ்வொரு திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் சிவனுக்கும், பார்வதி தேவிக்கும் வீட்டிலேயே செய்த சர்க்கரை பொங்கல், பாயசம் போன்ற இனிப்புகளை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். தூய்மையான பக்தியுடன் யார் ஒருவர் சர்க்கரை பொங்கல், பாயசம் படைத்து வழிபடுகிறாரோ அவருக்கு மகிழ்ச்சி, செல்வ வளம், ஐஸ்வர்யம் நிறைந்த வாழ்க்கை அமையும்.