18-ம் படி கருப்பணசாமி சன்னதியில் திருநிலை கதவுகளுக்கு சிறப்பு பூஜை 
வழிபாடு

18-ம் படி கருப்பணசாமி சன்னதியில் திருநிலை கதவுகளுக்கு சிறப்பு பூஜை

அழகர்கோவிலில் உள்ள 18-ம் படி கருப்பணசாமி சன்னதியில் திருநிலை கதவுகளுக்கு பக்தர்கள் மாலைகள், சந்தனம் சாத்தி வணங்கினர்.

மாலை மலர்

அழகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவிலுக்கு நேற்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இதில் அழகர் மலை உச்சியில் உள்ள நூபுர கங்கையில் ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி அங்குள்ள ராக்காயி அம்மனுக்கு தீபமேற்றி தரிசனம் செய்தனர்.

வரும் வழியில் உள்ள முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று நெய் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.மூலவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வித்தகவிநாயகர், வேல்சன்னதியிலும் விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.

மேலும் அழகர்மலை அடிவாரத்தில் உள்ள உற்சவர் கள்ளழகர் பெருமாள், தேவியர்களுடன், சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். இங்கும் பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர். காவல் தெய்வமான பதினெட்டாம் படி கருப்பணசுவாமி சன்னதியில் திருநிலை கதவுகளுக்கு பக்தர்கள் மாலைகள், சந்தனம் சாத்தி வணங்கினர். இந்த கோவில் வெளி பகுதியில் உள்ள கோட்டை வளாகத்தில் கருப்பணசாமி சன்னதி நோக்கி நேர்த்திகடனாக கிடாய்கள் வெட்டி, வழிபாடு செய்தனர்.