உறியடி உற்சவத்தில் வெங்கடேச பெருமாள் வெண்ணெய் குடத்துடன் வீதி உலா வந்தபோது எடுத்தபடம். 
ஆன்மிகம்

வரகூர் வெங்கடேச பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்

வரகூர் வெங்கடேச பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாலை மலர்

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே வரகூர் கிராமத்தில் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் உறியடி உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான உற்சவம் கடந்த மாதம் (ஆகஸ்டு) 27-ந் தேதி தொடங்கியது. உற்சவத்தில் நேற்று வெங்கடேச பெருமாள் வெண்ணெய் குடத்துடன் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் சாமிக்கு வெண்ணெய் வழங்கி வழிபாடு செய்தனர்.

வீதி உலாவை தொடர்ந்து வரகூர் கடுங்கால் ஆற்றங்கரையில் உள்ள மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து உறியடி உற்சவமும், வழுக்கு மரம் ஏறுதலும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.