சொர்க்கவாசல் 
ஆன்மிகம்

சொர்க்கவாசல் திறப்பு ஏன்?

வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன் என்பது பற்றி புராணங்களில் ஒருகதை தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசி நாளில் வைணவ ஆலயங்களில் ‘சொர்க்கவாசல் திறப்பு’ என்னும் ஒரு நிகழ்வு நடைபெறும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு சொர்க்க வாசல் திறப்பு என்றால் என்ன என்பது பற்றி தெரியாது. சொர்க்கம் என்பது புண்ணியம் செய்தவர்களுக்கு கிடைக்குமிடம்.

அவதார புருஷரான எம்பெருமானுடன் போரிட்டு, அவரின் அருள் பெற்ற மது, கைடபர் என்ற அரக்க சகோதரர்களுக்கும் கூட, பெருமாள் வைகுண்டத்தின் கதவை திறந்து தன் உலகிற்கு அவர்களை அழைத்துக் கொண்டார். அதை அனுபவித்த அரக்கர்கள் தங்களுக்கு கிடைத்த பேறு உலகில் உள்ள எல்லோரும் பெற வேண்டும் என்று விரும்பி ஆண்டவனிடம் “வைகுண்ட ஏகாதசி தினத்தில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது தங்களை தரிசிப்பவர்களும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களும், அவர்கள் எத்தகைய பாவங்கள் செய்து இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர்.

அவர்களின் வேண்டுகோளை பெருமான் ஏற்றுக் கொண்டார். அதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் (மோட்சவாசல்) திறக்கப்பட்டு, சாமி பவனி வரும் நிகழ்ச்சி ஏற்பட்டது. அந்த வாசல் வழியே வந்து பெருமாளை வணங்குவது வழக்கமாயிற்று.