ஆன்மிகம்

உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சதசண்டி யாகம்

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் நடந்த சதசண்டி யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் 43-ம் ஆண்டு சதசண்டி யாகம் நேற்று முன்தினம் பூஜையுடன் தொடங்கியது. இந்த சத சண்டி யாக பூஜையில் கலந்து கொண்டால் குடும்பத்தில் அமைதி தழைத்து, செல்வம் பெருகி மனச் சஞ்சலங்கள் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழலாம், நல்ல மழை பெய்து நாடு செழிக்கும் என்பது பக்தர்களின் ஐதீகம். நேற்று காலை விநாயகர், நவாவரண வழிபாடும், மதியம் தேவியர் போற்றி வழிபாடும், முதற்கால சத சண்டி யாகமும் நடந்தன. இதனை தொடர்ந்து நேற்று மாலை 2-ம் கால சதசண்டி யாகம் தொடங்கியது.

இதையடுத்து சுமங்கலி, கன்னியர், காளையர் வழிபாடுகளுடன் இரவில் 2-ம் கால சதசண்டி யாகம் நிறைவு பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

இன்று (வியாழக் கிழமை) மதியம் 3-ம் கால சதசண்டி யாகமும், மாலையில் 4-ம் கால சதசண்டி யாகமும் நடைபெறுகின்றன. நாளை (வெள்ளிக்கிழமை) 5-ம் கால சதசண்டி பெருயாகம் நடைபெற்று, மதியம் 12.15 மணியளவில் நிறைவு பெறுகிறது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்படுகிறது.

SCROLL FOR NEXT