ஆன்மிகம்

பத்மாவதி தாயார் பிரம்மோத்ஸவம்

திருமலையை தரிசனம் செய்ய வந்தவர்கள் இந்த தாயாரை வழிபட்டுவிட்டு, திரும்பி சென்றால்தான் திருமலைக்கு வந்த நோக்கம் பூர்த்தியடைவதாக ஐதீகம்.

திருமலை வேங்கடவன் வலது மார்பில் மகாலட்சுமியும், இடது மார்பில் பத்மாவதியும் இருப்பதாக ஐதீகம். திருச்சானூர் என்னும் அலமேலு மங்காபுரத்திலிருந்து அருள்பாலித்து வரும் தாயாருக்கு, பத்மாவதி என்ற பெயர் வழங்கப்படுகிறது. திருமலையை தரிசனம் செய்ய வந்தவர்கள் இந்த தாயாரை வழிபட்டுவிட்டு, திரும்பி சென்றால்தான் திருமலைக்கு வந்த நோக்கம் பூர்த்தியடைவதாக ஐதீகம்.

கார்த்திகை மாதத்தில் வரும் சுக்லபட்ச பஞ்சமி அதாவது வளர்பிறை ஐந்தாவது நாளன்று அங்கு பிரம்மோத்சவம் தொடங்கி பத்து நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். தாயாரின் பிரம்மோத்சவத்தின் கடைசி நாளன்று திருமலை வேங்கடவன் கூரைச்சேலை, ஆபரணங்கள் மலர் மாலைகள் ஆகியவற்றுடன் யானைமேல் விமரிசையாக, மேளதாளத்துடன் வருகை புரிவார்.

அவர் கொண்டு வந்த ஆடை, அணிகலன்களை தாயார் அணிந்து கொண்ட பின்புதான், கடைசி நாள் உற்சவம் நடைபெறுகிறது. மன்னன் தொண்டைமானின் கனவில் வந்து திருவேங்கடவன் கூறியதன் அடிப்படையில் பத்மாவதி தாயார் கோவில் அமைக்கப்பட்டதாகவும் செய்திகள் உள்ளன.