திருவட்டாரில் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதிதாக கொடிமரம் நிறுவப்பட உள்ளது.
இதற்காக கேரளா மாநிலம் பத்தினம்திட்டை மாவட்ட வனப்பகுதியில் இருந்து கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி 75 அடி உயரம் கொண்ட தேக்குமரத்தை தேர்வு செய்து கோவிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த மரத்தில் பச்சை கற்பூரம் மற்றும் மஞ்சள் அரைத்து பூசப்பட்டது.
சபரிமலையில் கொடிமரம் செய்த சிற்பி பாபு, இந்த மரத்தை கொடிமரமாக வடிவமைத்தார். அதைத்தொடர்ந்து கொடி மரத்தை பல்வேறு மூலிகை கலந்த எண்ணெய் தொட்டியில் வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முதலில் கொடி மரத்தில் எண்ணெய் ஊற்றி பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து கொடிமரம் எண்ணெய் தொட்டியில் வைக்கப்பட்டது.
இதில் கோவில் தந்திரி சங்கர நாராயணரு, நம்பூதிரி சஜித், அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, பெங்களூரு ஹரே கிருஷ்ணா நிர்வாகி சுதர்சன், சேவா டிரஸ்ட் தலைவர் அனந்த கிருஷ்ணன், கோவில் மேலாளர் மோகன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.