சந்திரனுக்குரிய நாள் திங்கட்கிழமை. அந்த கிழமையை பொதுவாக சோம வாரம் என்று குறிப்பிடுவார்கள். 12 மாதங்களில் கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சோமவாரத்திற்கு சிறப்பு அதிகம் உண்டு என்று புராணங்கள் கூறுகிறது.
அந்த வகையில் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சோமவார விரதங்களை பக்தர்கள் கடைபிடித்து சிவனை வழிபடுவது வழக்கம். ஏனெனில் அந்த நாட்களில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கேட்ட வரங்களை இறைவன் தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று சோமவார சிறப்பு வழிபாடு நடந்தது.
பண்ருட்டி திருவதிகையில் பிரசித்திபெற்ற வீரட்டானேஸ்வரர் கோவிலில் முதல் சோமவார உற்சவம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது.
இதையொட்டி காலை வீரட்டானேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து இரவு வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்பாள் வெள்ளி அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் இரவு சாமி வீதிஉலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.