கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இதனால் கோவில்கள் அனைத்தும் திறக்காமல் இருந்தது வந்தது. பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது ஊரடங்கில் 4-ம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதில் அனைத்து கோவில்களும் கடந்த 1-ந்தேதி முதல் திறக்கப்பட்டது.
அந்த வகையில் கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலிலும் திறக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று சனிக்கிழமை என்பதால் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. பக்தர்கள் அனைவரும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் துளசி, பூ, மாலை, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய் போன்றவற்றை வாங்கிக்கொண்டு கோவில் வளாகத்திற்குள் சென்றனர். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் கொரானோ தொற்று பரவலை தடுக்கும் விதமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்த பூஜை பொருட்களும் உள்ளே எடுத்து செல்லக்கூடாது என திட்டவட்டமாக கூறினார்கள். இதையடுத்து, பக்தர்கள் தாங்கள் எடுத்து வந்த பொருட்கள் அனைத்தையும் கோவிலில் ஒரு ஓரமாக வைத்து விட்டு சென்றனர். இது மட்டுமனறி கோவிலுக்குள் அமர்வதற்கும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.