பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இக்கோவிலில் ஆண்டு தோறும் தைதெப்ப உற்சவம் ராம தீர்த்த குளத்தில் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு வருகிற 30-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) தைதெப்ப உற்சவம் நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக குளத்தில் தண்ணீர் இல்லாததால் சுவாமி, அம்பாள் தெப்பத்தில் எழுந்தருள இயலவில்லை. இதனால் குளத்தின் மைய மேடையில் எழுந்தருளியும், மண்டபத்தை சுற்றி வந்தும் சுவாமி, அம்பாள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
ராமதீர்த்த குளத்திற்கு குழாய் மூலம் தண்ணீர் நிரப்பப்படுகிறது.
தெப்பக்குளத்தில் தொடர்ந்து தண்ணீர் இல்லாததால் செடிகளும், குப்பைகளும் நிறைந்து காணப்பட்டது. கோவில் நிர்வாகம் நன்கொடையாளர் உதவியுடன் பொக்லைன் எந்திரம் மூலம் கடந்த 2 நாட்களாக குளத்தை சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். மேலும் அருகில் உள்ள வாய்க்காலில் இருந்து தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி நேற்று முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்த ஆண்டு சுவாமி, அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள் என்பதால் பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.