திருவையாறு ஐயாறப்பர் 
ஆன்மிகம்

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் நாளை அப்பர் கயிலாய காட்சி

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் கயிலாய காட்சி நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

தஞ்சை மாவட்டம் திருவையாறில் ஐயாறப்பர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஐயாறப்பர், அறம்வளர்த்தநாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் தேவார ஆசிரியர்களுள் ஒருவரான அப்பருக்கு ஆடி அமாவாசை நாளில் சிவபெருமான் கயிலாய காட்சியை தந்து அருள்பாலித்ததாக தல வரலாறு கூறுகிறது.

இதை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடி அமாவாசை நாளில் அப்பர் கயிலாய காட்சி உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நாளை (புதன்கிழமை) இரவு ஆடி அமாவாசையையொட்டி அப்பர் கயிலாய காட்சி உற்சவம் நடக்கிறது.

முன்னதாக மதியம் ஐயாறப்பர் திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. தீர்த்தவாரி மற்றும் கயிலாய காட்சி உற்சவத்தில் தமிழகம் முழுவதிலும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள் என்பதால், ஐயாறப்பர் கோவில் மற்றும் காவிரி ஆற்றின் புஷ்ய மண்டப படித்துறையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியண்ணன், இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் செய்து வருகிறார்கள்.