தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மட்டுமே தினமும் 60-ம் கல்யாணம், ஆயுட்ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா மற்றும் பல்வேறு சிறப்பு யாகபூஜைகள் நடைபெற்று வருகின்றன. கோவிலுக்கு பல மாநிலங்களில் இருந்து முக்கிய அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அதிகாரிகள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் வந்து சாமி தரிசனம் செய்து வந்தனர்.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அரசு அறிவித்த ஊரடங்கு காரணமாக மேற்கண்ட அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாக பூஜைகள் செய்வதற்கு அரசு தடைவிதித்தது. இதனால் கோவிலை நம்பி இருந்து வந்த கோவில் குருக்கள், புகைப்படக்காரர்கள், நாதஸ்வர கலைஞர்கள், பூக்கடை வியாபாரிகள், ஆட்டோ, வாடகை கார், வேன் ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் வருமானம் இன்றி தவித்து வந்தனர்.
மேலும் இவர்கள் கோவிலில் மேற்கண்ட சிறப்பு பூஜைகளை செய்ய வேண்டி அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து அனைத்து யாக பூஜைகளும் தொடங்கின. இதில் ஏராளமான பக்தர்கள் 60-ம் வயது திருமணம் உள்ளிட்ட மேற்கண்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு 60-ம் திருமணம் செய்தனர்.