வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் தெப்ப திருவிழா நடைபெற்றபோது எடுத்த படம். 
ஆன்மிகம்

தென்திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் தெப்ப திருவிழா

தென்திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் தெப்ப உற்சவ நிகழ்ச்சிகள் தொடங்கியது. இதைத்தொடர்ந்து மலையப்பசுவாமி தங்க கவசத்தில் அருள்பாலித்தார்.

மாலை மலர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தென்திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தெப்ப உற்சவ நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கியது. விழாவையொட்டி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சுப்ரபாதம், 5.50 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணியிலிருந்து காலை 8.30 மணி வரை முதல் மணி வைபவம், காலை 10 மணியளவில் நேத்ரா தரிசனம் நடந்தது.

இதைத்தொடர்ந்து மலையப்பசுவாமி தங்க கவசத்தில் அருள்பாலித்தார். காலை 11.10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து மாலை 5.15 மணிக்கு பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராமர்-சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயருடன் சப்பரத்தில் திருவீதி உலா வந்து மாலை 5.45 மணிக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினா். சிறப்பு பூஜைக்கு பின்னர் வண்ண மலர்கள் தூவப்பட்ட தெப்பக்குளத்தில் சுவாமி 3 முறை உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 9-ந் தேதி வரை தெப்ப திருவிழா நடைபெற உள்ளாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.