ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. வெளியூர்களில் இருந்து நெல்லைக்கு வந்த ரெயில்கள், பஸ்களில் ஏராளமான மக்கள் வந்தனர். இதுதவிர கார், வேன்களிலும் ஏராளமானோர் வந்தனர்.
நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவில் படித்துறை, மேலநத்தம் அக்னிதீர்த்த கட்டம், சிந்துபூந்துறை சப்ததீர்த்த கட்டம், வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் படித்துறை, எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை அருகில் உள்ள ஜடாயு துறை, மணிமூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவில் படித்துறை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
சேரன்மாதேவியில் தாமிரபரணிக்கு ஆரத்தி பூஜை நடந்தபோது எடுத்த படம்.
கூட்ட நெரிசல் காரணமாக தாமிரபரணி ஆற்றில் பாதுகாப்பு நடவடிக்கையாக தண்ணீர் திறப்பு அளவு குறைக்கப்பட்டது. தைப்பூச மண்டப படித்துறையில் நேற்று காலை வேத பாராயணம், ஹோமங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து பன்னிரு திருமுறை பாராயணம் நடைபெற்றது.
மேலதிருவேங்கடநாதபுரம் தாமிரபரணி ஆற்றில் உள்ள சீனிவாச தீர்த்த கட்டத்தில் நேற்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இங்கு பக்தர்கள் புனிதநீராடி சீனிவாச பெருமாள் கோவிலில் தரிசனம் செய்தனர்.