கன்னியாகுமரி அருகே சாமிதோப்பில் அய்யா வைகுண்டர் தலைமைப்பதி அமைந்துள்ளது. அங்கு இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் பணிவிடை, வீதி உலா நடைபெற்றன. விழாவின் 11-வது நாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது.
இதையொட்டி காலை 10 மணிக்கு அ்யயாவுக்கு சிறப்பு பணிவிடை, 11 மணிக்கு அய்யா பல்லக்கு வாகனத்தில் வீற்றிருந்து, தேரில் எழுந்தருளல் நடைபெற்றது.
மதியம் 12 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. சந்தன குடம் ஊர்வலம், முத்துகுடைகள் முன் செல்ல காவி உடை, தலைப்பாகை அணிந்த அய்யாவழி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.
தேர் கீழரதவீதி, தெற்கு ரதவீதி, மேல ரதவீதி வழியாக வலம் வந்து மதியம் 2 மணிக்கு வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. அங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யாவுக்கு பூ, வெற்றிலை, பன்னீர் ஆகிய பொருட்களை சுருளாக படைத்து வழிபட்டனர். பின்னர் மாலையில் தேர் நிலைக்கு வந்தது.
தேரோட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், கொடியிறக்கமும் நடைபெறுகிறது.