பகல் 12 மணிக்கு நாயன்மார்களுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை வைபவங்களும் அதைத்தொடர்ந்து அன்னம்பாலிப்பும் நடந்தது. சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து மாலை 6 மணிக்கு சிவாச்சாரியார்கள் முன்னிலையில் 63 நாயன்மார்கள் வீதிஉலா, கோவில் வளாகத்தில் இருந்து தொடங்கியது. உலாவின்போது சிவனடியார் கூட்டத்தினர் பஞ்சவாத்தியம் இசைக்க, ஓதுவார் மற்றும் இறைநெறி மன்றத்தினரின் திருமுறை இசை, தெய்வத்திருவடிவ அணிவகுப்புடன் சென்றது.
இந்த அணிவகுப்புடன் சொர்ணாம்பிகை சமேதராக சுகவனேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 20 பல்லக்குகளில் அப்பர், சுந்தரர், சேக்கிழார், திருநீலகண்டர், சுந்தரமூர்த்தி உள்பட 63 நாயன்மார்கள், திருமுறைநாதர் ஆகியோர் வீதி உலா சென்றனர்.