தென் மாவட்டங்களில் உள்ள சுடலை மாடசாமி கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில், வள்ளியூர் அருகே உள்ள சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவிலாகும். இந்த கோவில் கொடை விழா 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆவணி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஆவணி கொடைவிழா வருகிற 31-ந் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. இந்த விழா நேற்று கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
காலையில் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. 10 மணிக்கு சுவாமி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கால்நாட்டுவிழா நடைபெற்றது. விழாவில் பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பால்குடம் எடுக்கும் பக்தர்களுக்கு காப்பு அணிவிக்கப்பட்டது. மதியம் அன்னதானம் நடந்தது.
முதல் நாள் நிகழ்ச்சியாக 31-ந் தேதி மாலை 4 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. 2-ம் நாள் நிகழ்ச்சியாக 1-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 2 மணிக்கு விநாயகர் மற்றும் அம்மன் கோவில்களில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சுடலை ஆண்டவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இரவு 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், நள்ளிரவு 12 மணிக்கு சுவாமி மயானம் சென்று வந்து சாமபடைப்பு தீபாராதனையும் நடக்கிறது.
2-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு சுவாமி வீதிஉலாவும், மதியம் 2 மணிக்கு பொங்கல் வழிபாட்டுடன் சிறப்பு பூஜையும் நடக்கிறது. விழாவை முன்னிட்டு வள்ளியூர், நாங்குநேரி, களக்காடு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கொடைவிழா ஏற்பாடுகளை சிறுமளஞ்சி இந்து நாடார் சமுதாயத்தினர் செய்து வருகின்றனர்.