மதுரை திருநகர் அண்ணா பூங்கா வளாகத்தில் இந்து சமய அறநிலைய துறைக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகா கணபதி ஹோமம் மற்றும் கும்ப அபிஷேகத்துடன் சதுர்த்தி விழா நேற்று தொடங்கியது. விநாயகப் பெருமானுக்கு மகா தீப, தூப ஆராதனை நடைபெற்றது. திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக தினமும் மாலை லட்சார்ச்சனை தொடங்கி நடை பெற்று வருகிறது.
நாளை லட்சார்ச்சனை விழா நிறைவடைகிறது. திருவிழாவின் முத்தாய்ப்பாக வருகிற 25-ந்தேதி மாலை 4 மணியளவில் விநாயகப் பெருமானுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. பிறகு மூஞ்சுறு வாகனத்தில் விநாயகப் பெருமான் எருந்தருளி நகர் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெயதேவி, நிர்வாக அதிகாரி சுரேஷ் கண்ணன், அலுவலர் இதயராஜன் மற்றும் கோவில் ஊழியர்கள், சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.