நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அம்பாள் சன்னதிக்கு முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் சிறப்பு பூஜையுடன் காலை 7.35 மணிக்கு வெண்பட்டு கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து தர்ப்பை புற்கள், பட்டு துணிகள் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தேன், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்டவை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவு சுவாமி- அம்பாள் வீதி உலா நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வருகிற 4-ந் தேதியும் (வெள்ளிக்கிழமை), சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா 6-ந் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.