சங்கரராமேசுவரர் கோவிலில் தேரோட்டம், பாகம்பிரியாள் அம்பாள் தேரில் எழுந்தருளிய காட்சி. 
ஆன்மிகம்

சங்கரராமேசுவரர் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மாலை மலர்

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஐப்பசி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவும் ஒன்றாகும். இந்த விழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்பாளுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.

விழா நாட்களில் அம்பாள் கிளி வாகனம், அன்னபட்சி வாகனம், சிம்ம வாகனம், வெள்ளிமயில் வாகனம், வெள்ளி விருஷப வாகனம், கமல வாகனம், காமதேனு வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

9-ம் திருநாளான நேற்று காலை 6 மணிக்கு பாகம்பிரியாள் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு பாகம்பிரியாள் அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து காலை 10.20 மணிக்கு தேரோட்டம் நடந்தது. அப்போது திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நகரின் ரதவீதிகள் வழியாக சென்று நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தன.

தேரோட்டத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சரும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், நெல்லை, தூத்துக்குடி ஆவின் தலைவருமான என்.சின்னத்துரை, கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மஞ்சள் இடித்தல் (திருப்பொற்சுண்ணம்), 10 மணிக்கு பாகம்பிரியாள் அம்பாளுக்கு குடமுழுக்கு தீர்த்தவாரி தீபாராதனை, இரவு 7 மணிக்கு பாகம்பிரியாள் அம்பாள் சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் பூம்பல்லக்கில் வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு பாகம்பிரியாள் அம்பாள், சங்கரராமேசுவரர் திருக்கல்யாணம் நடக்கிறது. 9.30 மணிக்கு பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடக்கிறது.