ஆன்மிகம்

திருச்சியில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து சென்ற பக்தர்கள்

திருச்சி வேப்பமரத்து மாரியம்மன் கோவிலில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் கரகம், பால்குடம் எடுத்து சென்றனர்.

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. சமயபுரத்தாளை வணங்கினால் சங்கடங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். தேர்திருவிழாவை முன்னிட்டு திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற சமயபுரத்தாளுக்கு கரகம், பால்குடம் எடுப்பது வழக்கம்.

அதேபோல திருச்சி பழைய பாஸ்போர்ட் அலுவலகம் அருகே டாக்கர் சந்தில் உள்ள சரஸ்வதி நடராஜன் கல்யாண மண்டபம் அருகில் வேலங்குடி வம்சா வழியினர் வழிபடும் உலகாளும் மகாமாரி, வேப்பமரத்து மாரியம்மன் கோவிலில் 15-ம் ஆண்டு கரகம் மற்றும் பால்குட திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.

அன்று மாலை 6 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், நேற்று மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சீர் கொண்டு வருதல் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. பின்னர் கோவிலிலிருந்து பக்தர்கள் நடைபயணமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு இரவு 7 மணிக்கு வெங்கங்குடி ஆற்றில் கரகம் பாலிக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சாமி குடிபுகுதல், அன்ன தானம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

இதைத்தொடர்ந்து இரவு 11 மணிக்கு மேல் விடையாற்றியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

SCROLL FOR NEXT