இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை கோவில் கொடிமரத்தில் இருந்து யானை மீது கோவில் அர்ச்சகர் பூக்கூடைகளில் பூக்களை வைத்து அமர்ந்திருக்க, கோவிலை வலம் வந்து கடைவீதி வழியாக கோவிலுக்கு சென்றடைந்தனர். அங்கு அம்மனுக்கு பூக்கள் சாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இணை ஆணையர்(பொறுப்பு) தென்னரசு, முன்னாள் இணை ஆணையர் குமரதுரை, கோவில் மேலாளர் ஹரிஹர சுப்பிரமணியன், மணியக்காரர் ரமணி, முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் துரைராஜசேகர் மற்றும் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள், பக்தர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அம்மன் பச்சை பட்டினி விரதம் தொடங்கினார். மேலும் காலை 8 மணியில் இருந்து திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தியும், மாலையணிந்தும் பாதயாத்திரையாக அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் படத்தை வைத்து பூக்களை எடுத்து கொவிலுக்கு வந்து, அம்மனுக்கு சாற்றினர்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
கொள்ளிடம் நெ.1 டோல்கேட்டில் இருந்து கூத்தூர், பழூர், பனமங்கலம், சமயபுரம் நால்ரோடு, ஒத்தக்கடை, சந்தை பகுதி ஆகிய இடங்களில் தொட்டிகள் வைக்கப்பட்டு, பக்தர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் நடமாடும் கழிவறை, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை ச.கண்ணனூர் பேரூராட்சி செயல் அலுவலர் மத்தியாஸ் தலைமையில் தலைமை எழுத்தர் சதீஸ் கிருஷ்ணன் மேற்பார்வையில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர்.