ஆன்மிகம்

ஐயப்பனுக்கு விரதம் ஏற்க கார்த்திகை மாதத்தை தேர்ந்தெடுத்தது ஏன்?

ஒருவர் சபரிமலைக்குச் செல்ல வேண்டுமானால், அவருடைய விரத நாட்களை அதற்குள் முடித்து பின்னர் இருமுடி எடுத்து செல்ல வேண்டும்.

மாலை மலர்

பழங்காலத்தில் மகர ஜோதி தரிசனம் மட்டுமே சபரி யாத்திரையாக கருதப்பட்டு வந்தது. அப்போதெல்லாம், டிசம்பர் மாத இறுதியில் பக்தர்கள் யாத்திரையைத் தொடங்குவார்கள். இதன்படி ஒருவர் சபரிமலைக்குச் செல்ல வேண்டுமானால், அவருடைய விரத நாட்களை அதற்குள் முடித்து பின்னர் இருமுடி எடுத்து செல்ல வேண்டும். இதன்படி செய்ய அவர் கார்த்திகை மாதம் முதல் நாள் மாலையிட்டால்தான் மகர ஜோதி தரிசனத்துக்கு யாத்திரை மேற்கொள்ள முடியும்.

சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியே மாலை அணிந்து, அன்று முதல் 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். இடையில் கோவிலுக்குப் போய் வந்த பிறகு, மாலையைக் கழற்றி விட்டாலும் கூட மகர விளக்கு வரை விரதத்தை தொடர வேண்டும். இந்த 60 நாட்களும் பிரம்மச்சரிய விரதம் பூண்டு, உணவைக் குறைத்து, ஐயப்பன் புகழ்பாடி விரதம் இருக்க வேண்டும். இதன் மூலம் ஐயப்பனின் அருளை முழுமையாகப் பெறலாம்.

ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றாலும் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும். இதனை ‘திரிகரணசுத்தி’ என்பர். அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி பக்தியுடன் சரணம் சொல்ல வேண்டும். தரையில், பாய் விரித்துப் படுக்க வேண்டும். தலையணை கூடாது. பிரம்மச்சரியம் கடைபிடிக்க வேண்டும். கரடுமுரடான மலைப்பாதையில் குளிர்ச்சி மிக்க பனிக்காலத்தில் செல்ல வேண்டும் என்பதற்காகவும், மன அடக்கத்திற்காகவும் இத்தகைய கடின பயிற்சி முறைகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டன.