ஆன்மிகம்

திருச்செந்தூரில் ரூ.100 கட்டண தரிசனம் ரத்து

திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா ஆண்டு தோறும் விமரிசையாக நடைபெறும்.

அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று முருகப்பெருமானை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நாளை மறுநாள் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும். மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கின்றது.

பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியும், இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகமும் நடக்கிறது.

சிறப்பு பஸ்கள்

திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் திரளான பக்தர்கள் வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.

திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றது.

தரிசன கட்டணம் ரத்து

வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள், நலன் கருதி இன்று முதல் 31-ந்தேதி வரை 4 நாட்கள் மட்டும் ரூ.100 கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட்டு கட்டணமில்லா தரிசன முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

எனவே, பக்தர்கள் இந்த 4 நாட்களும் கட்டணமில்லா தரிசன முறையை பயன்படுத்தி கொண்டு கோவிலில் தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.