ஆன்மிகம்

அரிய வழிபாட்டு தகவல்கள்

இந்து சமயத்தில் வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. சில அரிய ஆன்மிக வழிபாட்டு தகவல்களை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

வில்லுடன் சிவபெருமான்

மாயவரத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் தரங்கம்பாடி என்ற இடத்திற்கு அருகே அமைந்துள்ளது திருவேட்டக்குடி. இத்தல இறைவன், வேட்டுவ மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். அர்ச்சுனனுக்கு, பாசுபத அஸ்திரத்தை சிவபெருமான் வழங்கிய சிறப்புமிக்க திருத்தலமாக இந்த ஆலயம் போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமான் இடது கரத்தில் வில்லும், வலது கரத்தில் திரிசூலமும் கொண்டு காட்சிதருகிறார்.

சிம்ம வாகனத்தில் விநாயகர்

விநாயகப் பெருமானை ‘பஞ்சமுக விநாயகர்’ தோற்றத்தில் வழிபடுவது சிறப்பானது. பொதுவாக இந்த பஞ்சமுகம் வரிசையாகத் தான் இருக்கும். ஆனால் நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் பஞ்சமுக விநாயகருக்கு, நான்கு திசைகளைக் குறிக்கும் வகையில் நான்கு திசைகளுக்கு ஒரு முகமாகவும், மேற்பகுதியில் ஒரு முகமும் காணப்படுகிறது. மேலும் இந்த விநாயகர் சிம்ம வாகனத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

சங்கு சக்கரத்துடன் ராமன்

கும்பகோணம் அருகில் உள்ளது புள்ளம்பூதங்குடி திருத்தலம். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள மூலவர் வல்வில்லி ராமன் கிழக்கு நோக்கிய திருமுகம் கொண்டு புஜங்க சயனத்தில் சேவை சாதிக்கிறார். இவரது கைகளில் சங்கும், சக்கரமும் காணப்படுகிறது. இது ஒரு அபூர்வமான அமைப்பாகும்.

SCROLL FOR NEXT